சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாஜகவில் இணைந்தால் ஒரே நாளில் விடுவிக்கப்படுவார் என்று தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் தற்போது கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். கேஜரிவால் ஒருபோதும் தலைவணங்க மாட்டார். சிறைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்களின் உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து போராடுவார் என்று திப்ருகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட துலியாஜனில் நடைபெற்ற வாகனப் பேரணியின் போது அதிஷி தெரிவித்தார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவைப் போல கேஜரிவால் பாஜகவில் இணைந்தால் ஒரே நாளில் அவர் விடுதலை செய்யப்படுவார். கேஜரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் பாஜக அவரைக் கண்டு பயப்படுகிறது. சிறப்பு பள்ளிகள், உலகம் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை உருவாக்கி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஐ.ஐ.டி.யில் சேரும் தகுதியுடையவர்களாக உருவாக்கி வருவதால் பாஜக அவரை சிறையில் அடைத்துள்ளது.
தேர்தல் நேரத்தில் பெரிய வாக்குறுதிகளை அளிக்கும் பாஜக, அரசு அமைத்த பிறகு, அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மறந்துவிடுகின்றனர் என்றார்.
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.450 கிடைக்கவும், வீடுகள் குத்தகை கிடைக்கவும், குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் மனோஜ் தனோவருக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு திப்ருகர் மக்களிடம் அதிஷி வேண்டுகோள் விடுத்தார்.
அசாம் மக்கள் எப்போதும் ஆம் ஆத்மி கட்சிக்கும் அரவிந்த் கேஜரிவாலுக்கும் அன்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் என்றார் அதிஷி.
பணமோசடி தடுப்பு அமைப்பின் கட்டாய நடவடிக்கைகளிலிருந்து கேஜரிவாலுக்கு பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து மார்ச் 21ஆம் தேதி கேஜரிவாலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது.