கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி மாநில தலைமை காவல் அதிகாரியிடம் ‘மிஸ்டர் சின்ஹா’ என்கிற பெயரில் உள்ள சமூல வலைத்தள கணக்கின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.
‘மிஸ்டர் சின்ஹா’ என்கிற எக்ஸ் பக்கத்தில் கேரளாவில் மாணவர்களுக்கு இவைதான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்ட பதிவில் புத்தகத்தின் பக்கம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் அந்த பக்கத்தில் சில காட்சிகளும் தகவல்களும் உள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சமூக வலைத்தள பக்கம் குறித்து அமைச்சர் புகார் அளித்துள்ளார்.
சிவன்குட்டி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த புத்தகம் கேரள அரசின் கல்வித் துறை பதிப்பித்தது இல்லை. இது அரசின் மீதான பகைமை தூண்டும் இன்னொரு முயற்சி. கேரளத்தில் உள்ள தோழமையையும் ஒற்றுமையையும் எங்களுடன் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். வெறுப்புக்கு இங்கு இடமில்லை- அதனாலேயே வகுப்புவாதத்தால் இங்கு காலூன்ற முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவு நீக்கப்படவும் அதனை பகிர்ந்தவர் மீது முறையான நடவடிக்கை எடுக்கவும் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.