தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அரவிந்த் கேஜரிவால். கேஜரிவாலுக்கு அடுத்த மூத்த தலைவரான மனீஷ் சிசோடியாவும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் பிரசாரத்தை வேகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆம் ஆத்மி உள்ளது.
சிறையில் உள்ள கேஜரிவாலின் கடிதத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் அடிக்கடி சமூக வலைதளத்தில் படித்து விடியோவாக வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து சுனிதா கேஜரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் ஆத் ஆத்மி கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், சுனிதா கேஜரிவாலின் பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள சஞ்சய் சிங், தில்லியில் பொறுப்பேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தில்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.