குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களின் தரவுகளை அரசு பராமரிக்கவில்லை என்று ஆர்டிஐ கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமானது பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் மார்ச் 11-ஆம் தேதி அமல்படுத்தி மத்திய அரசு அறிவித்தது.
இந்த சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து, சமணம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், பார்சி மதங்களைச் சேர்ந்தவர்கள், மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருந்தால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது.
ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் மனித உரிமைக்கும் எதிரானது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட மார்ச் 11-ஆம் தேதிக்கு பிறகு எத்தனை பேர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அஜய் போஸ் என்ற ஆர்டிஐ ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், “இந்திய குடியுரிமைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் தரவுகள் அரசிடம் இல்லை, விண்ணப்பித்தவர்களின் தரவுகளை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பதிலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள போஸ், தரவுகளே இல்லையெனில் எப்படி குடியுரிமை வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இணையதளம் மூலம் பெறப்பட்டு வரும் குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை எப்படி இல்லாமல் போகும் என்று பல்வேறு தரப்பினர் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.