உத்தர பிரதேசத்தில் மனைவியின் பேச்சை மீறி தங்கையின் திருமணத்துக்கு பரிசளிக்க நினைத்தவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா(வயது 35). இவரது தங்கைக்கு வரும் 26-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தங்கையின் திருமணத்துக்கு தங்க மோதிரமும், தொலைக்காட்சியும் பரிசளிக்க சந்திர பிரகாஷ் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், சந்திர பிரகாஷின் மனைவி சாபிக்கு இது பிடிக்காததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சாபியின் சகோதரர்கள் சந்திர பிரகாஷை அழைத்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், சந்திர பிரகாஷ் உடன்படாததால் அவரை சாபியின் சகோதரர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சுமார் ஒரு மணிநேரம் சந்திர பிரகாஷை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணைக்கு பிறகு சந்திர பிரகாஷின் மனைவி சாபி மற்றும் அவரது சகோதரர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.