கொல்கத்தாவில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பலியானார், உள்ளூர் பாஜக பெண் தலைவர் பலத்த காயம் அடைந்தார் என்று காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மேற்கு வங்கம் மாநிலம், பகுயாட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. அப்போது செங்கல் மற்றும் மட்டையால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் திரிணமூல் காங். தொண்டர் சஞ்சீவ் தாஸ் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் பலியானதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஆனந்தபூர் பகுதியில் பெண் பாஜக தலைவர் சரஸ்வதி சர்க்கார் சனிக்கிழமை இரவு திரிணமூல் காங். தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பதாகைகள் வைத்துக்கொண்டிருந்தபோது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், இதனால் தனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
பாஜகவின் ஐடி பிரிவு தலைவரும் மேற்கு வங்கத்தின் இணைப் பொறுப்பாளருமான அமித் மால்வியா தனது எக்ஸ் தளப் பதிவில், மேற்கு வங்காளத்தில் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.