
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக மீட்புப் பணிகளை ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.
இதுவரை 282 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 200 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணிகளை தற்காலிகமாக ராணுவ வீரர்கள் நிறுத்தினர்.
இருப்பினும் முண்டக்கைக்கு ஆற்றை கடந்து செல்வதற்கான தற்காலிக பாலத்தை அமைக்கும் பணியை மட்டும் விடிய விடிய தொடர்ந்தனர்.
தற்போது தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஜேசிபி வாகனங்கள் நிலச்சரிவு நடந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்களும், மீட்புப் படையினரும் கனரக வாகனங்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன், வயநாடு எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகின்றனர்.
வயநாடு மாவட்டம் முண்டக்கை சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.