
உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறைசார் சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘உபர்’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது.
உபர் செயலி மூலம் இனி, கார், ஆட்டோ, பைக் சேவை மட்டுமல்லாது, படகு சேவையையும் புக் செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரின் ‘தல்’ ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக 'உபர் ஷிகாரா' என்ற பெயரில் படகு போக்குவரத்து சேவையை உபர் நிறுவனம் தொடங்கியுள்ளது.
காஷ்மீரின் பாரம்பரியமிக்க இந்த ஷிகாரா படகு சவாரி செய்ய விரும்புவோர், உபர் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உபர் ஷிகாரா படகு சவாரிக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதிகபட்சமாக 15 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே இந்த படகு சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணம் முழுவதும் படகுகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கே சென்று சேரும் என்றும், உபர் நிறுவனத்தால் சேவைக் கட்டணத் தொகை பிடித்தம் செய்து கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தல்’ ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக சுமார் 4,000 ஷிகாரா பட்குகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆசியாவிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் வெனிஸ் நகரில் இதே பாணியில் படகுப் போக்குவரத்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் காஷ்மீர் செல்வோரும் ஷிகாரா படகு சவாரியில் உபர் மூலம் எளிதாக பயணிக்கலாம்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.