பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு!
தில்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று நேரில் சந்தித்து பேசினார்.
ஆந்திரத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைக்க ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடிக்க சந்திரபாபு நாயுடுவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக, நேற்று சந்திரபாபு நாயுடு பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில், இன்று ஆந்திர முதல்வரும், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
தில்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வெங்கடாசலபதி திருவுருவ சிலையைப் பிரதமர் மோடிக்குப் பரிசளித்தார்.