மகாராஷ்டிரம் தானேவில் நிலத்தகராறு காரணமாக பழங்குடியைச் சேர்ந்த 41 வயது நபரை கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யாசின் ஷாஹனவாஸ் சிக்லேகார் எனும் குற்றவாளி 5 பேருடன் சேர்ந்து சந்தோஷ் தியோ பாபர் எனும் பழங்குடி நபரைக் கடத்தி அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் துன்புறுத்தியுள்ளார். பின்னர் பங்களா ஒன்றிற்கு அவரைக் கொண்டு சென்று அவரை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து பின்னர் பாட்டில்களால் தாக்கியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு துல்சி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அவரைக் கடத்தியுள்ளனர். குற்றவாளியின் அலுவலகத்தில் அவரைக் அடித்துத் துன்புறுத்தியவர்கள் பின்னர் அவரை பங்களா ஒன்றிற்கு கொண்டு சென்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் பிரபல குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ல் நாசிக், தானே, பல்கார், ராய்காட், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து அவர் இரண்டு ஆண்டுகளுக்கு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளி சிக்லேகார் மற்றும் 5 பேர் மீது 6 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.