காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கியது. அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து பிகாரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராகுலில் பிகார் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பிகார் மாநிலத்துக்குள் நுழைந்த முதல் நாளே ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பிகாரில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்றுடன் பிகார் பயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி, மாலை உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள் நுழையவுள்ளார்.
இந்த நிலையில், ராகுலின் இறுதி நாள் பயணத்தில் இணைந்த பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி, சாசராம் பகுதியில் இருந்து ராகுலின் காரை ஓட்டி ஆதரவு தெரிவித்தார்.
பிற்பகல் 2 மணியளவில் கைமூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுலும், தேஜஸ்வியும் உரையாற்றவுள்ளனர்.