மாயாவதி உண்மையிலேயே பாஜகவை எதிர்ப்பதாக இருந்தால் பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறினார்.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பிரமோத் திவாரி, “மாயாவதி பாஜகவை உண்மையாகவே எதிர்ப்பதாக கருதினால், பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு மோடியை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரமோத் திவாரி, “நாங்கள் சமாஜ்வாதி கட்சியுடன் இருமுறை சந்தித்து பேசியுள்ளோம். தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.” என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.