அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணையை துவக்கினர்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் சனிக்கிழமை விசாரணையைத் துவக்கினர்.
இதையும் படிக்க | திரைப்படங்கள் பார்த்த மாணவர்களுக்கு வடகொரியா அளித்த கடும் தண்டனை!
இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை முதலே முதல்வரின் இல்லம் மற்றும் அமலாக்கத்துறையின் வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அம்மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் இதற்கு முன்னதாக அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை புறக்கணித்திருந்தார்.
இந்நிலையில் எட்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதே நேரம் எங்களது கட்சிக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையைத் தொடர்ந்து எங்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.