சண்டிகர்: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ அல்லது பட்டய கணக்காளர்களாகவோ உருவாக்க விரும்புவர்கள் இனி அவர்களை அரசியல்வாதியாக ஆக்கவும் பரிசீலிக்க வேண்டும் என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் இன்று தெரிவித்தார்.
நல்லாட்சிக்கு திறமையான அரசியல்வாதிகள் முக்கியமானவர்கள், நல்ல தலைவர்கள் இருந்தால் நாடு வேகமாக முன்னேறும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினியர், பட்டய கணக்காளர்களாகவோ ஆக ஆசைப்படுவதுடன், அவர்களை நல்ல அரசியல்வாதியாகவும் உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
அம்பாலா கண்டோன்மென்டில் உள்ள ஒரு பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அனில் விஜ், நாட்டின் வளர்ச்சிக்காக சமூக ஊடகங்கள் மற்றும் நமோ செயலி மூலம் இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அனில் விஜ், வாக்காளர்கள் ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும், அதில் அவர்களின் பங்கேற்பு அவசியம் என்றும் தெரிவித்தார். அதே வேளையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தனது கல்லூரி நாட்களை அனில் விஜ் நினைவு கூர்ந்தார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பிரதமர் மோடியின் தீர்மானத்தை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வலுவான கொள்கைகள் மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்பு கொண்ட கட்சி என்று பாஜகவை பாராட்டினார்.