குஜராத் மாநிலத்தின் சூரத் விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு இன்று (ஜன. 31) வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் உள்நாட்டு விமான நிலையமாக இருந்த சூரத் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சூரத் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்த நிலையில், ஒரு மாத இடைவேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சூரத் விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து தளத்தில் சூரத்தை முக்கிய இடமாக மாற்றும் நோக்கத்திலும், அதன் சுற்றுப்புற பகுதிகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரத் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்த புதிய முனையம், குஜராத் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.