
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாட்டின்கராவில் உள்ள சிறப்பு பள்ளியில் காலரா நோய் தாக்கியதில் 26 வயது இளைஞர் பரிதாபமாக பலியானார்.
ஸ்ரீகாருண்யா சிறப்புப் பள்ளி விடுதியில் உள்ள 10 பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விதுராவைச் சேர்ந்த அனில்குமாரின் மகன் அனு (26) பரிதாபமாக உயிரிழந்தார்.
அனுவுக்கு வியாழன் அன்று வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. அதே நாளில் நெய்யாட்டின்கரா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீகாருண்யா சிறப்புப் பள்ளி விடுதியில் 65 மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், காலரா நோய்த் தாக்கத்தால் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளி விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு கேரளத்தில் மீண்டும் காலராவுக்கு ஒருவர் பலியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு மட்டும் 11 பேருக்கு நோய் அறிகுறிகளும், 9 பேருக்கு நோய்த் தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோசமான சுகாதாரம், அசுத்தமான நீர் ஆதாரங்களால் காலரா நோய் பரவுகிறது. முதலாவதாக, குடிநீரை போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்டதா அல்லது சூடாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உணவு சமைப்பதற்கு முன் சோப்பு மற்றும் தண்ணீரால் கை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதைத் தவிர்ப்பதற்கு முறையான கழிவுகளை அகற்றுவது முக்கியம்.
கூடுதலாக, யாராவது வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு போன்ற நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி மருத்துவரை அணுக வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.