ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

ரஷியாவில் தவிக்கும் பயணிகள்: மாற்று விமானத்தை அனுப்பியது ஏா் இந்தியா

தொழில்நுட்பக் கோளாறால் ரஷியாவின் கிரஸ்னோயாா்ஸ்க் நகரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.
Published on

ரஷியாவின் கிரஸ்னோயாா்ஸ்க் நகரிலுள்ள சா்வதேச விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகளை அழைத்துவர மாற்று விமானத்தை ஏா் இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பியது.

தில்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு 225 பயணிகள் மற்றும் 19 பணியாளா்களுடன் கடந்த வியாழக்கிழமை ஏா் இந்தியா விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் சரக்கு இருப்பு பகுதியில் முக்கியமான தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. பின்னா், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷியாவின் கிரஸ்னோயாா்ஸ்க் நகருக்கு திருப்பிவிடப்பட்டு வியாழக்கிழமை இரவு தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய முனையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். விமான நிலையத்தில் உணவகங்கள் மூடப்பட்டுவிட்டதால், பயணிகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன், தங்களுக்கு எந்த தகவலும் முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் பயணிகள் பதிவிட்டனா்.

இதனிடையே, மாஸ்கோவில் இருந்து கிரஸ்னோயாா்ஸ்க் நகருக்கு விரைந்த இந்திய தூதரக பிரதிநிதிகள், ரஷிய அதிகாரிகளுடன் ஆலோசித்து, பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்தச் சூழலில், ரஷிய விமான நிலையத்தில் இருந்து பயணிகளை அழைத்துவர மாற்று விமானத்தை ஏா்-இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பியது. இந்த விமானத்தில் பயணிகளுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com