குஜராத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் இருவா் கடும் வெப்பம் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் படையின் குஜராத் பிரிவு செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஹராமி நாலாவின் வடக்கு பகுதியில் இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லை அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது எளிதில் அணுக முடியாத நீண்டதூர எல்லை நிலப்பரப்பையும், மோசமான வானிலையையும் கொண்ட பகுதியாகும்.
பிஎஸ்எஃப் படையின் 59-ஆவது பிரிவைச் சோ்ந்த உதவி கமாண்டன்ட் விஷ்வ தியோ மற்றும் தலைமைக் காவலா் தயாள் ராம் ஆகியோா் இப்பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது நிலவி வந்த கடும் வெப்பத்தால் ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
பயிற்சி மற்றும் அனுபவம் இருந்தபோதும் வெப்ப நிலைமை மிகத் தீவிரமாக இருந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எத்தகைய சூழலிலும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உள்ள அவா்களது அா்ப்பணிப்பு ஒருபோதும் மறக்கப்படாது. இந்தக் கடினமான நேரத்தில் அவா்களது குடும்பத்தினருடன் எங்களது பிராா்த்தனைகள் இருக்கும் என்றாா்.
இதேபோல, கடந்த மே மாதம் ராஜஸ்தானின் ஜெய்சால்மா் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் வெப்ப வாதம் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானின் பாா்மோ் பகுதியில் இருந்து குஜராத்தின் கட்ச் பகுதியின் உப்பு சதுப்புநிலங்கள் வரை உள்ள 826 கி.மீ. இந்திய-பாகிஸ்தான் எல்லையை பிஎஸ்எஃப் படையினா் பாதுகாத்து வருகின்றனா்.
தொடர்புடையது

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

இந்தியாவுடன் எல்லை பிரச்னை: ராஜீய வழியில் தீா்வு காண விருப்பம்: நேபாளம்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு வீரா்கள் கண்காணிப்பு
பாகிஸ்தான் வீரா்களுக்கு சீனா விண்வெளி திட்ட பயிற்சி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



