
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் முடிவை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது.
அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அதில் கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள பாமங் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் நபம் துகி கூறுகையில், ''தேர்தல் முடிவுகளால் நாங்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஆனால், மனச்சோர்வடையவில்லை. காங்கிரஸ் கட்சி பொறுப்புணர்வுடன் மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது. வாக்குப்பதிவில் பங்கேற்ற அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்தலில் கட்சி தோற்றுவிட்டது. ஆனால், எங்களின் தைரியம் தோற்கவில்லை. காங்கிரஸ் கட்சி கடுமையாக உழைத்து, மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் லட்சியங்களுக்காகவும் பொறுப்புடன் தொடர்ந்து போராடும். நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அயராது உழைத்து, தேர்தல் செயல்பாட்டில் தங்களால் இயன்ற முயற்சிகளை வழங்கிய கட்சித் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, வரும் நாட்களில் அதை சரிசெய்ய பணியாற்றுவோம்'' என்றார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 46 இடங்களை வென்று பெரும்பான்மையைப் பெற்ற பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேசமயம் என்பிபி 5, என்சிபி 3, இதர கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.