மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, ஹூக்ளி மற்றும் நாடியா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். பல்வேறு அரசுத் திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார்.
பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்க உள்ளார். இந்த நிலையில், இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெறிமுறைப்படி இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஆனால் சந்திக்கும் நேரம் குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரியவந்ததுள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில், பானர்ஜி புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தினார். மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.18 லட்சம் கோடி பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.