மக்களவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம், கிருஷ்ணாநகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் மஹுவா மொய்த்ராவை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக சொல்கிறது, முதலில் 200 இடங்களைத் தாண்டுங்கள் என்று அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
2021 பேரவைத் தேர்தலில், 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள், ஆனால் 77 இடங்களில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது சட்டப்பூர்வ குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றுவதற்கான ஒரு பொறியாகும்.
எனவே, சிஏஏ அல்லது என்ஆர்சி இரண்டையும் மாநிலத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
மேற்கு வங்காளத்தில் இந்தியக் கூட்டணி இல்லை. இங்கு சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸும் பாஜகவுக்காக உழைக்கின்றன. எங்கள் எம்பி மஹுவா மொய்த்ரா பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்ததால் அவதூறு செய்யப்பட்டு மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.