மேற்கு வங்க மாநிலம் ஆரம்பாக் நகரில் நடைபெற்ற வாகன பேரணியில் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, அக்கட்சியின் வேட்பாளர்கள் மிதாலி பாக்கை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜகவினர் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரத்திற்கு மக்களிடம் இருந்து வாக்குகளை வாங்க நினைக்கின்றனர்.
இங்கு தில்லிக்கு நிகராக அதிகாரத்தை மாற்றுவதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, அதிகாரம் மாற்றப்பட வேண்டும். தற்போதுள்ள பாஜக தலைவர்கள் சமூக விரோதிகளாக உள்ளனர். பயங்கரவாத கட்சி ஆட்சி வருவதை தடுக்க பாஜகவுக்கு வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பாஜகவினர் மேற்கு வங்க மக்கள் மீது தொடந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.பொய்யான பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பணம் கொடுத்து சந்தேஷ்காளி பெண்களை அவமரியாதை செய்தார்கள்.
மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்களின் வேலைகளையும் பாஜக பறித்துள்ளனர்.
நேற்று வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, உண்மை வென்றுவிட்டது. தற்போதைக்கு வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் காலை முதல் இரவு வரை பொய்களையே பேசுகிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை (என்ஆர்சி) பயன்படுத்தி பாஜக அரசு மக்களை விரட்டுகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
மேலும் 100 நாள் வேலைக்கான பணம் எங்கள் கட்சியால் திருடப்பட்டதாக மோடி கூறுகிறார். ஆனால், 100 நாள் வேலையின் மூலம் ரூ.24 கோடி ரூபாய், மாநில அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த முறையும் மோடி வெற்றி பெற்றால் நாம் அனைத்தையும் இழந்து விடுவோம். இனி வரும் காலங்களில் நமக்கு எந்த தேர்தலும் கிடையாது என கடுமையகாக விமரிசித்துள்ளார்.