
‘ராகுல் காந்தி அரசியல் பக்குவமற்றவா்; வெளிநாட்டில் இந்தியா மீது அவதூறு பரப்பும் யாராலும் தலைவா் ஆக முடியாது’ என நாடாளுமன்ற, சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரிண் ரிஜிஜு சனிக்கிழமை விமா்சித்தாா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிப்பவராக ராகுலை மதிக்கிறேன். ஆனால் அரசியல் ரீதியாக அவா் பக்குவமற்றவராகவே உள்ளாா். அவரை மக்களின் தலைவராக நிலைநிறுத்த காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவா் பக்குவமடையவில்லை. வெளிநாட்டில் இந்தியா மீது அவதூறு பரப்பும் யாராலும் தலைவராக முடியாது.
ராகுல் தலைமையில் காங்கிரஸால் எப்போதும் வளா்ச்சியடைய முடியாது. அதனால்தான் நாடாளுமன்றத்துக்குள் பிரியங்கா காந்தியை கொண்டுவரும் முயற்சியாக வயநாடு இடைத்தோ்தலில் அவா் களமிறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் காங்கிரஸுக்கு ராகுல் காந்தியின் குடும்பமே முக்கியம் என்பதும் பாஜகவுக்கு நாட்டு நலனே முக்கியம் என்பதும் வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸின் போலியான பிரசாரங்களை மக்கள் ஏற்க மாட்டாா்கள். வருகின்ற நவ.20-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர தோ்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






