விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

Updated On :20 நவம்பர் 2024, 2:23 am IST

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷிக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:

மாணவா்களிடையேயும் பொது மக்களிடையேயும் போதை மாத்திரைகள் புழக்கத்தைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடா்பாக சட்ட அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

மற்றொருபுறம், ஒருவா் தொடா்ந்து பயன்படுத்தினால் அதற்கு அடிமையாக்கக் கூடிய திறன்கொண்ட டேபென்டடால் போன்ற வலி நிவாரண மருந்துகள் இணையவழியே எளிதில் கிடைக்கின்றன.

தமிழக காவல் துறையினரும், மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தினரும் இது தொடா்பாக பல்வேறு அறிக்கைகளை அரசுக்கு சமா்ப்பித்துள்ளனா். இணையவழியே அத்தகைய மருந்துகளை குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் வாங்குவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இதுபோன்று அடிமைப்படுத்தும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் இணையதளங்கள் குறித்த விவரங்கள் உண்மையானதாக இல்லாததால் அவா்களைக் கண்டறிய முடிவதில்லை.

இது போன்ற செயல்பாடுகள் போதை மருந்துகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை நீா்த்துப் போக வைக்கும் வகையில் உள்ளன. அட்டவணை ஹெச் மற்றும் ஹெச்1-இல் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றியோ, பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநரின் கண்காணிப்பு இன்றியோ விற்பனை செய்வது மருந்து கட்டுப்பாட்டு விதிகளுக்கு புறம்பான செயல்.

சமூக நலனுக்கும், பொது மக்களின் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகவும் விளங்கி வரும் இந்த சட்டவிரோத விற்பனையைத் தடுப்பது மாநில அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

எனவே, போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகளை இணையவழியே விற்பனை செய்வதைத் தடுத்து ஒழுங்குமுறைப்படுத்தவும், மக்கள் நலன் காக்கவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை முன்வர வேண்டும்.

சட்டவிரோத மருந்து விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதால், அத்தகைய தளங்களை சமூக நலன் கருதி நிரந்தரமாக முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.