
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு காலமானார்.
அவருக்கு 2000 -ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2008-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, பில்கேட்ஸ் உள்ளிட்டோர் என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மும்பையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஆர்வத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் இந்தியாவை உலகளவில் வெளிப்படுத்தியவர். பல ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர். இவர் பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். இவர் அனைவராலும் விரும்பப்பட்டு நேசிக்கப்பட்டவர். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடங்களை போற்றுவேன். அவர் இந்திய நாட்டின் உண்மையான மகன். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.