நீரவ் மோடி (கோப்புப்படம்)
நீரவ் மோடி (கோப்புப்படம்)

நீரவ் மோடியின் ரூ.29.75 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் நீரவ் மோடியின் ரூ.29.75 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
Published on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் நீரவ் மோடியின் ரூ.29.75 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபா் நீரவ் மோடி சுமாா் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானாா். அவா் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைநகா் லண்டனில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டாா்.

நீரவ் மோடியின் மோசடி தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன. இந்நிலையில், அமலாக்கத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நீரவ் மோடி மற்றும் அவரின் குழும நிறுவனங்கள் பெயரில் ரூ.29.75 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியாவில் இருப்பது தெரியவந்தது.

நிலம், கட்டடம் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருப்புத் தொகையாக அந்தச் சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவை பண முறைகேடு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டன.

ஏற்கெனவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.2,596 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மேலும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018-இன் கீழ், நீரவ் மோடி மற்றும் அவரின் கூட்டாளிகளுக்குச் சொந்தமான ரூ.692.90 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை மும்பை சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்தது என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com