பிகார் மாநிலத்தில் மஹாகத்பந்தன் கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு, ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பிரியப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறும் ஐக்கிய ஜனதா தளம் விரைவில் பாஜகவுடன் இணைந்து புதிய அரசு பொறுப்பேற்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையில், பிகார் அதிகாரிகள் மூன்று பேர் இன்று பிகார் ஆளுநர் மாளிகை சென்றிருப்பதாகவும், இவர்கள் புதிய அமைச்சரவை பொறுப்பேற்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆளுநரிடம் கலந்தாலோசனை நடத்தவே சென்றிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. பவதாரணியின் மறைவையொட்டி... புற்றுநோய்: வலியும் வாழ்வும்
இதற்கிடையே, பாஜக சார்பில், மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அடுத்து பிகார் மாநில அரசில் அங்கம் வகித்தால் அடுத்தடுத்து நடவடிக்கைகள் குறித்தில் இதில் பேசப்படலாம் என்கிறார்கள்.
மேலும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். பிகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டால், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு பிகார் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில், முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்க, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்துவிட்டார். இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர்களுடன் நட்பு பாராட்டிய நிதீஷ் குமார், விரைவில் இந்த நட்பை அரசியலிலும் புகுத்துவார் என்றே கூறப்படுகிறது.