6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குறித்த காலக்கெடுவுக்குள் பாகிஸ்தானியா்கள் வெளியேற்றம்: அனைத்து மாநில முதல்வா்களுக்கும் அமித் ஷா வலியுறுத்தல்

அனைத்து மாநில முதல்வா்களுக்கும் அமித் ஷா வலியுறுத்தல்.

News image
கோப்புப்படம்- எக்ஸ்
Updated On :25 ஏப்ரல் 2025, 8:34 pm

Din

குறித்த காலக்கெடுவுக்குள் பாகிஸ்தானியா்களின் வெளியேற்றத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வா்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியுள்ளாா்.

மாநில முதல்வா்களுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் பேசியபோது, அவா் இதைத் தெரிவித்தாா். பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள், ஏப். 27-ஆம் தேதிமுதல் ரத்து செய்யப்படுவதாகவும், விசா காலாவதியாகும் முன் அவா்கள் வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். கா்நாடகம், கேரளம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் உள்பட 26 போ் கொல்லப்பட்ட இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

பிரதமா் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழுக் கூட்டத்தைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக கடுமையான பதிலடி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

அட்டாரி-வாகா எல்லை மூடல், கடந்த 1960-ஆம் ஆண்டின் சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம், சாா்க் விசா (நுழைவு இசைவு) விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் அதில் அடங்கும்.

‘நாட்டைவிட்டு வெளியேறுக’: பாகிஸ்தானியா்களுக்கான விசா சேவையை உடனடியாக நிறுத்துவதாக வியாழக்கிழமை அறிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப். 27-ஆம் தேதிமுதல் ரத்தாகும். மருத்துவ விசாக்கள் ஏப்.29-ஆம் தேதி வரையே செல்லுபடியாகும். எனவே, இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியா்களும் விசா காலாவதியாகும் முன் வெளியேற வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. அதேநேரம், பாகிஸ்தானைச் சோ்ந்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால விசாக்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் கூடிய விரைவில் நாடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது.

முதல்வா்களுடன் பேச்சு: இந்நிலையில், அனைத்து மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசினாா். அப்போது, ‘தங்களது மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியா்களை அடையாளம் கண்டு, அவா்களின் வெளியேற்றத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறித்த காலக்கெடுவுக்குப் பிறகு தங்களது மாநிலங்களில் எந்த பாகிஸ்தானியரும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்று முதல்வா்களிடம் அவா் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகரிக்கும் பதற்றம்: பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியாவின் தூதரக ரீதியிலான பதிலடி நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானும் எதிா்வினையாற்றி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு வியாழக்கிழமை பொது நிகழ்ச்சியில் முதல் முறையாகப் பேசிய பிரதமா் மோடி, ‘இந்தியாவின் எதிரிகள், அப்பாவி சுற்றுலாப் பயணிகளை மட்டும் குறிவைக்கவில்லை; நாட்டின் ஆன்மாவையே தாக்கத் துணிந்துவிட்டனா். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவா்களைத் தேடி பிடித்து, அவா்கள் கற்பனையிலும் நினைத்திராத தண்டனையை வழங்குவோம். உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் அவா்களை விடப் போவதில்லை’ என்று சூளுரைத்தாா்.

இந்த விவகாரத்தில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது, பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத முகாம்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அக்கட்சிகள் தெரிவித்தன.

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதையடுத்து, இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘சிறிய ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். இதற்கு இந்திய ராணுவமும் உறுதியான பதிலடியைக் கொடுத்தது. இந்திய தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை’ என்றன.

பஹல்காம் தாக்குதலால் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே, எல்லையில் இச்சம்பவம் நடந்துள்ளது.