
லண்டன்: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு பிரிட்டனுக்கு சென்றுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன.
ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான குழு உள்பட ஏழு எம்.பி.க்கள் தலைமையிலான குழுக்களும் கடந்த மே 21-ஆம் தேதிமுதல் உலகெங்கிலும் 33 நாடுகளின் தலைநகரங்களுக்குச் சென்று இந்தியாவுக்கு ஆதரவு திரட்டின.
இந்த நிலையில், பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்ட பின் லண்டனில் உள்ள ’இந்தியா இல்லத்தில்’ இன்று(ஜூன் 3) செய்தியாளர்களுடன் பேசிய ரவி சங்கர் பிரசாத்:
“பயங்கரவாதமொரு புற்றுநோய் என்பதை இங்குள்ளவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர், கவலையும் கொண்டுள்ளனர். பாகிஸ்தான் சர்வதேச நிதியத்திடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் இன்னும் பிறவற்றிடமிருந்தும் கடன்கள் பெற்றுள்ளது. இந்த நிதியனைத்தும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறதா? ஆயுதங்கள் கொள்முதலுக்காக பயன்படுகிறதா? அல்லது ஏழைகளுக்காக பயன்படுகிறதா? இதனை அவர்களிடமே கேட்டு தெளிய வேண்டும்.
அனைத்துக்கட்சி நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவாக வெளிநாடுகளுக்குச் செல்வது ஒரு புதிய முன்னெடுப்பு என்பதையும் இங்குள்ளோர் குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.