
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஜ் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீதும் பாகிஸ்தான் ட்ரோன்களை வீசித் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. எனினும் அவற்றை இந்திய ராணுவம் வான் பரப்பிலேயே முறியடித்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் நாக்ரோட்டா, உத்தம்பூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தின் சம்பா மற்றும் பதான்கோட் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய மாநிலங்கள்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரின் காரணமாக எல்லையோர மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தன், குஜராத் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ராஜஸ்தான் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரோன்கள் கண்டறியப்பட்ட 26 இடங்கள்
எல்லையோரப் பகுதிகளான பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபஸில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மெர், பூஜ், குவார்பெட், லாக்கி நாலா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தளமான பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ஆம் தேதி 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 13 நாள்கள் கழித்து கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இடங்கள் தகர்க்கப்பட்டன.
இதனால், கடந்த மூன்று நாள்களாக இரவு நேரங்களில், இந்திய எல்லையோரக் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
நேற்று, பாகிஸ்தானின் 8 ட்ரோன்களை வான்வெளி பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை எல்லையோரப் பகுதிகளில் 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!