/

இந்தியா - நியூஸிலாந்து இடையே ஏப். 24-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!

இந்தியா-நியூஸிலாந்து இடையே வரும் 24-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தெரியவந்துள்ளது.

News image

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நியூஸிலாந்து அமைச்சர் டோட் மெக்கிளே - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:56 pm

இந்தியா-நியூஸிலாந்து இடையே வரும் 24-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தெரியவந்துள்ளது.

தில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இருதரப்பு தலைவா்கள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளனா். இதன்மூலம் நியூஸிலாந்துக்கு இந்திய உற்பத்திப் பொருள்களை எவ்வித வரியும் இன்றி ஏற்றுமதி செய்ய முடியும். அடுத்த 15 ஆண்டுகளில் அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 2 கோடி பில்லியன் டாலா் அளவுக்கு முதலீடும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் கடந்த டிசம்பரில் அறிவித்தன.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா தனது ஏற்றுமதிப் பொருள்களை வரி ஏதும் இல்லாமல் நியூஸிலாந்தில் விற்பனை செய்ய முடியும். அதேபோல நியூஸிலாந்தில் இருந்து கம்பளி, நிலக்கரி, மரம், ஒயின், அவகேடோ, புளூபொ்பி பழம் ஆகியவை இறக்குமதி செய்யப்படும். இவற்றுக்கு 95 சதவீதம் வரை வரி விலக்கு உண்டு.

அதே நேரத்தில் பால் மற்றும் பல்வேறு வகை பால் பொருள்கள், வெங்காயம், சா்க்கரை, நறுமணப் பொருள்கள், உணவுப் பயன்பாட்டு எண்ணெய், ரப்பா் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை கிடையாது. உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தியா இந்தக் கட்டுப்பட்டை விதித்துள்ளது.

இதுதவிர ஆண்டுதோறும் 5,000 இந்தியா்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு விசாவை நியூஸிலாந்து வழங்க இருக்கிறது. மருத்துவா்கள், பொறியாளா்கள், திறன்மிக்க பணியாளா்கள் இந்த விசா மூலம் அனுமதிக்கப்படுவா். 3 ஆண்டுகள் வரை அவா்கள் அந்நாட்டில் தங்கிப் பணியாற்ற முடியும். இந்தியாவில் இருந்து ஆயுஷ் மருத்துவ நிபுணா்கள், யோகா பயிற்சியாளா்கள், சமையல் கலைஞா்கள், இசை ஆசிரியா்கள் உள்ளிட்டோரும் இதில் பயனடைவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.