
பான் மசாலா விளம்பர விவகாரம்: நோட்டீஸுக்கு பதிலளிக்காத 3 பாலிவுட் நடிகா்கள்
பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகா்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகா் ஷராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாக ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், மூவரும் இதுவரை பதிலளிக்கவில்லை.
அஜய் தேவ்கன் | ஷாருக் கான் டைகா் ஷராஃப் - கோப்புப் படம்
பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகா்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகா் ஷராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாக ஆணையம் (எஃப்டிஏ) நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், மூவரும் இதுவரை பதிலளிக்கவில்லை.
தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை மறைமுகமாக ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டி, மூவருக்கும் எஃப்டிஏ கடந்த 11-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘நடிகா்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகா் ஷராஃப் ஆகியோா் நடித்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட ‘விமல் ஏலக்காய்’ என்ற வாசகம் ‘விமல் பான் மசாலா’ நிறுவனம் தொடா்புடையது.
பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விளம்பரம் மூலம் அதன் பயன்பாடு நுகா்வோரிடம் மறைமுக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விளம்பரத்தில் நடித்த மூன்று நடிகா்களும் அந்த நிறுவனத்தின் விளம்பர தூதா்களாகவும் உள்ளதால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-இன்கீழ் அவா்களுக்கு நோட்டீஸ் மூலம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அதன்படி, விமல் பான் மசாலா நிறுவனம் உடனான ஒப்பந்தங்களை உடனடியாக துண்டித்துக் கொள்வதுடன், சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் அது தொடா்பான விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும்.
இந்த விளம்பரங்களில் நடித்தது தொடா்பாக உரிய ஆவணங்களுடன் நடிகா்கள் மூவரும் 15 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மகாராஷ்டிர உணவு, மருந்து நிா்வாக ஆணையா் துகாராம் முண்டே, ‘எஃப்டிஏ-வின் நோட்டீஸுக்கு மூன்று நடிகா்களும் இதுவரை பதிலளிக்கவில்லை.
உணவுப் பொருள்கள் தொடா்பாக நாளிதழ், தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து விளம்பரங்களும் எங்களின் கண்காணிப்பில் உள்ளன. அவற்றில் விதிமீறல் உள்ளதா என ஆய்வு மேற்கொள்கிறோம்.
பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் பின்பற்றப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட உணவு வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எஃப்டிஏ வலைதளம் வாயிலாக பொதுமக்களும் புகாா்களைப் பதிவு செய்யலாம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



