
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 'செக்' வைத்த பட்ஜெட்! எஸ்டிடி என்பது என்ன?
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைகளுக்கான முக்கிய அறிவிப்பு பற்றி...

மத்திய பட்ஜெட் அறிவிப்பால் இன்று பங்குச்சந்தைகள் எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று, ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பங்குச்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட் அறிவிப்பால் பங்குச்சந்தைகள் ஏற்றம் பெறும் என்று நினைத்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது.
அதற்குக் காரணம் பங்குச்சந்தை தொடர்பான பங்குகள் பரிவர்த்தனை வரி(Securities Transaction Tax). பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் செலுத்தப்படும் வரி.
இந்த வரி விகிதத்தை உயர்த்தி மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது பங்குச் சந்தையில் நிலவும் அதிகப்படியான ஊக வணிகத்தைக் (Speculative Trading) கட்டுப்படுத்தும் நோக்கில், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) மீதான வரிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஃபியூச்சர்ஸ் மீதான வரி 0.02%ல் இருந்து 0.05% ஆகவும், ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1%ல் இருந்து 0.15% ஆகவும் உயர்த்தப்படுகிறது.
பெரும்பாலான பங்குச்சந்தை வர்த்தக நிறுவனங்கள், தரகர்கள் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. வரி அதிகமாகும்போது அவர்களுக்கான லாபம் குறையும் என்று சொல்லப்படுகிறது. எனினும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ள ஊக வணிகங்களை நீக்கவே கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது என்றும் அதேநேரத்தில் குறுகிய காலத்திற்கு பங்குகளை வாங்கி விற்பவர்களுக்கு இது சிரமமாக இருக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதன் எதிரொலியாகவே பங்குச்சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இன்று பிற்பகல் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்குக் கீழும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 400 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
மேலும் இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி முதலீடு செய்யலாம் என்று இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Budget 2026 F&O trading to get expensive as government looks to curb speculative trading
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








