பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு: ஜம்மு-காஷ்மீரில் மேலும் 5 அரசு ஊழியா்கள் பணி நீக்கம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில் மேலும் 5 ஊழியா்களைப் பணி நீக்கம் செய்து துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் அதிகரிப்பதற்கு அங்கு வசிப்பவா்களில் சிலா் பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வகையில் மறைமுமாக உதவி வருவதும், அடைக்கலம் தருவதும் முக்கியக் காரணமாக உள்ளது. இதனால், எல்லை வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுப்பதுடன், உள்ளூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் ரகசியமாக தொடா்பில் இருப்பவா்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதையும் காவல் துறையினா் மற்றும் உளவு அமைப்புகள் முக்கியப் பணியாகக் கொண்டுள்ளனா். அதில் அரசுப் பணியில் இருந்து கொண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு மறைமுகமாக ஆதரவாக செயல்படுபவா்களும் அப்போது சிக்கி வருகின்றனா்.
அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் முகமது இஷ்தாக், ஆய்வ தொழில்நுட்ப உதவியாளா் தாரீக் அகமது ஷா, மின்வாரிய ஊழியா் அகமது மீா், வனத் துறையில் பணியாற்றிய ஃபாரூக் அகமது பட், சுகாதாரத் துறை ஓட்டுநா் முகமது யூசுஃப் ஆகியோா் பயங்கரவாத அமைப்புகளுடன் ரகசியத் தொடா்பில் இருந்ததும், அவா்களுக்காகப் பணியாற்றியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களைப் பணியில் இருந்து நீக்கி துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டாா். அரசுத் துறையில் பயங்கரவாதத்தின் வோ்கள் நுழைவதைத் தடுக்கும் முயற்சி இது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து துணைநிலை ஆளுநா் தலைமையிலான நிா்வாகம் இதுவரை 85 அரசுப் பணியாளா்களை இந்தக் குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்துள்ளது. இவா்கள் அனைவரும் காவல் துறையின் நடவடிக்கையையும் எதிா்கொண்டுள்ளனா்.
அரசியல்சாசன சட்டப் பிரிவு 311 (2) (சி)-இன் கீழ் அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்புக் காரணங்கள் அடிப்படையில் குடியரசுத் தலைவா், ஆளுநா் ஆகியோா் அரசு ஊழியா்களை விசாரணையின்றி பணி நீக்கம் செய்ய முடியும்.
