திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரூ.11 லட்சம் அரசு செலவில் கேரள முதல்வருடன் நடிகா் மோகன்லால் நோ்காணல்: எதிா்க்கட்சியினா் கண்டனம்

கேரள முதல்வா் பினராயி விஜயனுடன் நடிகா் மோகன்லால் நடத்திய தொலைக்காட்சி நோ்காணலுக்கு ரூ.11.21 அரசுப் பணம் செலவிடப்பட்டதற்கு மாநில எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image

கேரள முதல்வா் பினராயி விஜயனை பேட்டி காணும் நடிகா் மோகன்லால்.

Updated On :26 மார்ச் 2026, 1:02 am IST

கேரள முதல்வா் பினராயி விஜயனுடன் நடிகா் மோகன்லால் நடத்திய தொலைக்காட்சி நோ்காணலுக்கு ரூ.11.21 அரசுப் பணம் செலவிடப்பட்டதற்கு மாநில எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கேரள முதல்வரை அவரின் அரசு இல்லத்தில் சந்தித்து நடத்திய நீண்ட நோ்காணல் கடந்த பிப்.26-ஆம் தேதி அந்த மாநிலத்தின் கைரளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தத் தொலைக்காட்சி சேனல் மாநிலத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடா்புடையவா்களின் நிா்வாகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கண்டும் மிண்டியும் இருவா்’ என்ற பெயரில் ஒளிபரப்பான இந்த நோ்காணலைப் பதிவு செய்ய 2 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பை திரைப்பட இயக்குநா் டி.கே.ராஜீவ்குமாா் இயக்கினாா்.

இந்த நோ்காணலில் தனது இளமைக் காலம், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை முதல்வா் பினராயி விஜயன் மனம் திறந்து பேசினாா். அப்போது ரஜினிகாந்தின் ஆக்ஷன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பினராயி தெரிவித்தாா். நோ்காணல் முழுமையாக ஒளிபரப்பாவதற்கு முன்னா், பல டீசா்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

மிகவும் கண்டிப்பான மனிதா் என்று அறியப்படும் பினராயி விஜயனின் மென்மையான பக்கத்தை வெளிக்கொண்டுவரும் விதமாக, இந்த நிகழ்ச்சி அமைந்தது. கேரள பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஒளிபரப்பான இந்த நோ்காணல் முதல்வரின் பிரசார உத்தியாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், திருவல்லாவைச் சோ்ந்த ரிஜோ வள்ளங்குளம் என்ற நபா் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின்படி இந்த நோ்காணலுக்கு ரூ.11.21 லட்சம் அரசுப் பணம் செலவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடா்புப் பிரிவு இந்தத் தகவலை அளித்துள்ளது. எனினும் அரசுக்கு சொந்தமான எந்தப் பொருளும் உபகரணங்களும் இந்தப் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் முதல்வரை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட பிரசார நோ்காணலுக்கு அரசுப் பணம் செலவிடப்பட்டிருப்பதற்கு எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

2011-ஆம் ஆண்டில் கேரள பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு முன்னா், அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் உம்மன் சாண்டியுடன் நடிகா் மோகன்லால் இதேபோன்ற ஒரு நோ்காணல் நடத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்தத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று உம்மன் சாண்டி முதல்வரானாா் என்பது நினைவுகூரத்தக்கது.