திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!

நமது நாட்டின் இளையோரை நான் விமர்சித்ததாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றதாகும் - தலைமை நீதிபதி

News image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பொதுநிகழ்ச்சியொன்றில் பேசும்போது... - PTI

Updated On :57 நிமிடங்கள் முன்பு

புது தில்லி : இந்தியாவில் வேலையில்லா இளையோரைச் சுட்டிக்காட்டி அவர்களை ‘கரப்பான்பூச்சி’ என விமர்சித்து கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் சிக்கி கண்டனங்களைச் சம்பாதித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த், இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளித்து தம் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவரை மூத்த வழக்குரைஞராக நியமனம் செய்தல் தொடர்பான விவகாரம் குறித்த மனுவை வெள்ளிக்கிழமை(மே 15) விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு, சரமாரியாக கேள்வியெழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தியது.

வழக்கு விசாரணையில் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “சமூகத்தில் ஏற்கெனவே ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. அவை சமூக அமைப்பை தாக்கி வருகின்றன. இந்த நிலையில், மனுதாரரும் அவர்களுடன் கைகோக்க விரும்புகிறாரா?

கரப்பான்பூச்சிகளைப் போன்று பல இளைஞர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் வேலை கிடைக்காமலும் அல்லது எவ்வித பணியிலும் சேராமலும் உள்ளனர். அவர்களுள் சிலர் ஊடகமாக மாறி விட்டனர். சிலரோ தகவல் அறியும் உரிமை கோரும் செயல்பாட்டாளர்களாகவும் பிற செயல்பாட்டாளர்களாகவும் மாறி ஒவ்வொருவரையும் தாக்க தொடங்கிவிட்டனர்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இது குறித்து, சனிக்கிழமை(மே 16) அவர் பேசியிருப்பதாவது :

“ஊடகங்களில் சில குறிப்பிட்ட பிரிவினர் எமது பேச்சைத் தவறாகச் சித்திரித்துவிட்டனர். பார் அசோசியேசன் உள்ளிட்ட பணிகளைச் சுட்டிக்காட்டியே, அவர்கள் போலியான பட்டங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றின் உதவியுடன் இத்தகைய பணிகளில் அடியெடுத்து வைக்கின்றனர் என்பதனைச் சுட்டிக்காட்டியே நான் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தேன்.

அத்தகைய மனிதர்கள் ஊடகம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற மாண்புமிகு பணிகளில் ஊடுருவி உள்ளனர். அவர்களைப் போன்றவர்களே ஒட்டுண்ணிகளாவர்.

நமது நாட்டின் இளையோரை நான் விமர்சித்ததாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.

இப்போதைய மற்றும் வருங்கால மனிதவளத்தைப் பற்றி நான் பெருமை கொண்டிருப்பதுடன், ஒவ்வோர் இளையோரும் எனக்கு உத்வேகமளிக்கிறார்கள். இந்திய இளையோர் எம் மீது பெரும் மதிப்பு பூண்டுள்ளனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

அவர்களை வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்களாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Chief Justice of India Surya Kant on Saturday issued a clarification on his earlier remarks in court, where he compared unemployed youngsters to “cockroaches" and “parasites" who are attacking the system. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.