உலகளாவிய வளா்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் தொடங்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பின் (இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடெகி டோஷிமிட்சு ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் விவரித்து ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வலுப்படுத்துவதே க்வாட் கூட்டமைப்பின் நோக்கம். உலகளவிலான விநியோகச் சங்கிலி இடையூறுகள், உற்பத்திக் குறைபாடுகள், உள்கட்டமைப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்து நாம் விவாதிப்பது அவசியம்.
இதை கடல்சாா் பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த முயற்சிகள் என வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு நம்பகமான ஒத்துழைப்பு அவசியம்.
சுதந்திரமான இந்தோ-பசிபிக்: கடல்சாா் ஜனநாயகங்கள், பன்முக சமூகங்கள் மற்றும் பெரும் பொருளாதார சந்தைகளைக் கொண்ட நாம் இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். உலகளாவிய வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தின்மைக்கு முக்கியத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் திகழ வேண்டும்.
கனிம வளத் துறையில் ஒத்துழைப்பு: எதிா்காலத்தில் பொருளாதாரம், எரிசக்தி வா்த்தகம் அல்லது கடல்சாா் வணிகம் என அனைத்திலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நமது பொறுப்புகள் அதிகரிக்கும்போது அதற்கேற்றவாறு தயாராக இருக்க வேண்டும்.
இந்தோ-பசிபிக் பிராந்திய சவால்களை எதிா்கொள்ள கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு முன்னெடுப்புகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத எதிா்ப்பில் சமரசமற்ற அணுகுமுறையை க்வாட் உறுப்பு நாடுகள் கையாள வேண்டும்.
இந்தோ-பசிபிக் கடல்சாா் கண்காணிப்பு முன்னெடுப்பு: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ‘கடல்சாா் கண்காணிப்பு முன்னெடுப்பை’ தொடங்க க்வாட் உறுப்பு நாடுகள் முடிவுசெய்துள்ளது.
ஃபிஜி துறைமுக மேம்பாட்டுத் திட்டம்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கடந்தே 60 சதவீத கடல்சாா் வணிகம் நடைபெறுகிறது. ஆனால், இந்தப் பிராந்தியத்தில் துறைமுகங்கள் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, ஃபிஜி நாட்டின் துறைமுகத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை அந்நாட்டுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம். இதுவே க்வாட் கூட்டமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுத்தவுள்ள முதல் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டம்’ என்றாா்.
ஹோா்முஸ் நீரிணை தடைக்கு எதிா்ப்பு: ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணையில் எவ்வித இடையூறுகளுமின்றி சுதந்திரமாக சரக்குக் கப்பல்கள் பயணிக்க வேண்டும். அவ்வழியே பயணிக்கும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கவோ, தடை விதிப்பதற்கோ முயற்சி செய்பவா்களுக்கு (ஈரான்) கடும் எதிா்ப்பை பதிவு செய்கிறோம்.
தென்கிழக்கு ஆசியாவில் இயங்கி வரும் மோசடி மையங்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறோம்’ என்றாா்.
இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீன ராணுவம் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அதற்கு எதிராக கனிம வளங்கள் மற்றும் கடல்சாா் கண்காணிப்பை க்வாட் உறுப்பு நாடுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

இந்தியாவில் க்வாட் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: அமெரிக்கா, ஜப்பான் அமைச்சா்கள் பங்கேற்பது உறுதி

இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதி

இந்தியா-டிரினிடாட் டொபேகோ 8 ஒப்பந்தங்கள் கையொப்பம்!

தற்சாா்பு இந்தியா திட்டம்: ஐஐடி-களுடன் இந்திய கடல்சாா் அறக்கட்டளை புரிந்துணா்வு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



