6. காய்ச்சல் - ஏன், எதனால் ஏற்படுகிறது?

பரம்பரை நோய்களை வாங்க நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவை தானாகவே நம் உடல் என்னும் வீட்டின் கதவைத் தட்டி திறந்துகொண்டு வந்துவிடும்.
6. காய்ச்சல் - ஏன், எதனால் ஏற்படுகிறது?

காய்ச்சல் பல்வேறு விதமாக உடலில் ஏற்படுகிறது என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். அடுத்து, காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

நுண்கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல் (நுண்கிருமிகளின் தொற்று)

நமது உடலுக்குள் நுழைந்து பெருகி, உடல் பாதிப்பை ஏற்படுத்தும் ஏதாவது ஒரு நுண்கிருமியால்தான் மனிதர்களுக்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. அந்தக் கிருமி ஒரு பாக்டீரியாவாக இருக்கலாம். வைரஸ் கிருமியாக இருக்கலாம். பூஞ்சை வகை நுண்கிருமியாகக்கூட இருக்கலாம். இவை தவிர, ஒட்டுண்ணிகள் பாதிப்பு, சில வகை பூச்சியினங்கள் பாதிப்பு அல்லது புழுக்களின் பாதிப்பினால்கூட காய்ச்சல் ஏற்படலாம்.

இப்படி நுண்கிருமிகளின் தாக்கத்தால் உண்டாகும் நோய்த் தொற்று, உடலில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், உடல் முழுவதையும் இது பாதிக்கும் என்பதால்தான், உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது.

பெரும்பாலான காய்ச்சல் முன்பு கூறியதுபோல் கிருமிகளின் தொற்றால்தான் ஏற்படுகிறது என்பது அறிவியல் உலகம் அறிந்த உண்மை. இருந்தாலும், சில வகைக் காய்ச்சல்கள் வேறு சில காரணங்களாலும் ஏற்படுகிறது. இவ்வாறு காய்ச்சல் ஏற்படுவது அரிதானது, அபூர்வமானது என்றாலும், அதைப்பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

மருந்துகளால் ஏற்படும் காய்ச்சல்

சிலருக்கு, அவர்கள் எடுத்துக்கொள்ளும் சில வகை மருந்துகளால்கூட காய்ச்சல் ஏற்படும். என்னது? காய்ச்சலுக்குத்தானே மருந்து எடுத்துக்கொள்வோம். மருந்து எடுத்துக்கொள்வதால் காய்ச்சல் வருமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். உண்மைதான். இப்படி, காய்ச்சலை ஏற்படுத்தும் மருந்துகள் ஏராளமாக உள்ளன.

நுண்ணுயிர்க்கொல்லியாகப் பயன்படும் சில மருந்துகளே (Antibiotics - Penicillins, Cephalosporins…) காய்ச்சலை ஏற்படுத்தலாம். இதே நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை சில நோய்த்தொற்றுகளின் பாதிப்பைக் குறைப்பதற்காகக் கொடுக்கிறோம் என்பது வேறு கதை!

வலிப்பு நோயாளிகளுக்குத் தரப்படும் சில வலிப்பு குறைப்பான் மருந்துகளாலும் காய்ச்சல் வரலாம். காச நோயாளிகளுக்குத் தரப்படும் காசநோய்க் கிருமிக்கு எதிரான மருந்துகளாலும் காய்ச்சல் ஏற்படலாம்.

ரத்த அழுத்தத்துக்காகத் தரப்படும் சில மருந்துகளாலும், இதய நோயாளிகளுக்கு இதயம் சீரில்லாமல் துடிப்பதைத் தடுப்பதற்காகக் தரப்படும் சில மருந்துகளாலும்கூட காய்ச்சல் வரலாம்.

இப்படி சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது?

இந்த மருந்துகளுக்கு எதிராக உடலில் எதிர்ப்பாற்றல் புரதம் (Antibodies) உருவாகின்றன. அதன் காரணமாகத்தான் காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால், உடனே இன்றே இப்பொழுதே காய்ச்சல் ஏற்படுவதில்லை. மருந்து எடுத்துக்கொண்ட ஏழு முதல் பத்து நாள்களுக்குள் காய்ச்சல் வரும். ஏனெனில், அப்போதுதான் எடுத்துக்கொண்ட மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகரித்திருக்கும்.

இவ்வகைக் காய்ச்சல், அதாவது மருந்துகளால் ஏற்படும் காய்ச்சல், எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திய ஓரிரு நாட்களிலேயே குறைந்துவிடும். அதனால் பயப்படத் தேவையில்லை.

எனவே, மேலே குறிப்பிட்ட மருந்துகளையோ, வேறு எதாவது மருந்துகளையோ தொடர்ந்து உட்கொண்டு வரும்போது காய்ச்சல் வந்தால், இந்த மருந்துகளால் காய்ச்சல் வந்திருக்குமோ என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், நாமும் குழம்பி, மருந்துவரையும் குழப்பி, ஏராளமான பரிசோதனைகளைச் செய்து, பணத்தையும் விரயம் செய்து, உடலையும் கெடுத்துக்கொள்ளவேண்டி வரும்.

இணைப்புத் திசு நோய்களால் வரும் காய்ச்சல்

இணைப்புத் திசு நோய்களாலும் சிலருக்குக் காய்ச்சல் வரும். இதில் ஏராளமான நோய்கள் இருக்கின்றன. சாதாரண உடல் வலி, மூட்டு வலியில் தொடங்கி, ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், மற்றும் பிற உடல் உள்உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய அளவில் இவை தீவிரமடையலாம். அதேநேரம், இவர்களுக்குக் காய்ச்சலும் ஏற்படும். குறிப்பாக, இளம் வயதினருக்கு இத்தகைய காய்ச்சல் ஏற்படும். இந்தக் காய்ச்சல் நீண்டகாலம் தொடரும். ஏனெனில், இந்த நோய்களும் நீண்டகால நோய்கள்தான்.

நாளமில்லாச் சுரப்பி நோய்களால் வரும் காய்ச்சல்

நாளமில்லாச் சுரப்பி நோய்களால் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களாலும் காய்ச்சல் ஏற்படும். தைராய்டு, அட்ரீனல் போன்ற சுரப்பிகளால் ஏற்படும் நோய்களின் காரணமாக, உடலில் வளர்சிதை மாற்றங்களில் பாதிப்பு ஏற்படுவதால், இவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் வெப்பநிலை தாழ்வுநிலைக்குச் செல்லவும் நேரலாம்.

ரத்த நோய்களால் ஏற்படும் காய்ச்சல்

ரத்தம் தொடர்பான பல்வேறு பரம்பரை நோய்களாலோ அல்லது ரத்தப் புற்றுநோயாலோ காய்ச்சல் ஏற்படலாம். இவர்களுக்கு, ரத்தக்கசிவு, ரத்தச்சோகை ஆகிய பாதிப்புகளோடு காய்ச்சலும் ஏற்படும்.

புற்றுநோய்களால் ஏற்படும் காய்ச்சல்

சில வகை புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியே காய்ச்சலாகத்தான் இருக்கும். என்ன, பயமுறுத்துகிறேன் என்று பார்க்கிறீர்களா? நான் சொல்வது உண்மைதான். பயமுறுத்துவது நானில்லை, புற்றுநோய்தான்.

உதாரணத்துக்குச் சொல்வதென்றால், கல்லீரல், பெருங்குடல், இரைப்பை, கணையம், சிறுநீரகம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும்போது நோயாளிக்குக் காய்ச்சல் கண்டிப்பாக ஏற்படும்.

இதய நோய்கள் - நுரையீரல் - சுவாச மண்டலம் - ஜீரண மண்டல நோய்களால் ஏற்படும் காய்ச்சல்

மேற்கூறிய உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்றுகளால் காய்ச்சல் ஏற்படும் என்பது நான் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இதே உறுப்புகளில் நோய்த் தொற்று இல்லாமலும், வேறு பல நோய்களாலும் பாதிப்புகளாலும் காய்ச்சல் ஏற்படும்.

உதாரணத்துக்கு, இதய மேலறைகளில் ஏற்படும் சில கட்டிகளால் (Atrial Myxoma), பெருந்தமனி பாதிப்புகளால் காய்ச்சல் ஏற்படலாம். நுரையீரலில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளாலும், ரத்த நாள பாதிப்புகளாலும் (Pulmonary Embolism Allergic Alveolitis) காய்ச்சல் ஏற்படும்.

ஜீரண மண்டலத்தைப் பொறுத்தவரை, மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோயாலும், கணையப் பாதிப்புகளாலும், பெருங்குடல் பாதிப்புகளாலும் காய்ச்சல் ஏற்படலாம்.

பரம்பரைக் காரணங்களால் ஏற்படும் காய்ச்சல்

இன்றைய காலகட்டத்தில், பரம்பரைச் சொத்தை வாங்க வேண்டுமானால், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டாமல் வாங்க முடியாது. ஆனால், பரம்பரை நோய்களை வாங்க நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவை தானாகவே நம் உடல் என்னும் வீட்டின் கதவைத் தட்டி திறந்துகொண்டு வந்துவிடும். அதில் ஒன்றுதான் காய்ச்சல்.

பத்து வயதாவதற்கு முன்பாகவே காய்ச்சல் எட்டிப் பார்த்துவிடும். காய்ச்சலுடன், மூட்டு வலி, வயிற்று வலி, நெஞ்சு வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படும். இந்தக் காய்ச்சல், மத்திய தரைக்கடல் பகுதி மக்களையே பெரிதும் பாதிக்கிறது என்பதால், இந்த வகைக் காய்ச்சலுக்கு அந்த இடத்தின் பெயரையே வைத்துவிட்டார்கள் (Familial Mediterranean Fever). அழையா விருந்தாளியாக வருந்துபோகும் இந்தக் காய்ச்சல், நம் நாட்டில் ஏற்படும் அபூர்வம்தான்.

மனநோயாளிகளுக்கு ஏற்படும் காய்ச்சல்

பல காரணங்களால், மன நோயாளிகள் காய்ச்சல் இருப்பதாகச் சொல்லி மருத்துவர்களை அடிக்கடி பார்க்க வருவார்கள். பரிசோதித்தால், இவர்களுக்குக் காய்ச்சல் இருக்காது. இல்லை என்று சொன்னால், காய்ச்சலை இவர்களே உருவாக்குவார்கள். இவர்கள் ஏதாவது மருந்துகளையோ, நோய்த் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளையோ சிரை வழியாகச் செலுத்த, அது நுரையீரல் நாளங்களிலோ அல்லது இதய உட்சுவர்களிலோ அழற்சி பாதிப்பை ஏற்படுத்தி, உண்மையாகவே காய்ச்சலை ஏற்படுத்திவிடும். இவர்களில் சிலர், போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களாகவும் இருப்பார்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இவர்களுக்கு வருவதாகச் சொல்லப்படுவது பொய்யான காய்ச்சல். சில வேளைகளில் அந்தப் பொய்யான காய்ச்சலையே இவர்கள் நிஜ காய்ச்சலாக்கிவிடுவார்கள்.

கண்டுபிடிக்க முடியாத காய்ச்சல் (Idiopathic)

கடன் கொடுத்தவரை கடன் வாங்கியவர் அலையவிடுவதுபோல, சில காய்ச்சல்கள், எதனால், எப்படி ஏற்பட்டன என்பதைக் கண்டுபிடிக்க, பரிசோதனைக்கு மேல் பரிசோதனை செய்துகொண்டே இருக்க வேண்டும். இப்படி அல்லல்பட்டாலும் பலன் கிடைப்பதில்லை. என்ன முயன்றாலும் கண்டறிய முடியாது. இத்தகைய காய்ச்சலை காரணமே தெரியாத காய்ச்சல் என்று சொல்லலாம்.

நம் உடலில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்ட நாம், காய்ச்சல் வரும்போது உடலில் ஏற்படும் வினைகள் குறித்தும், மாற்றங்கள் குறித்தும் அடுத்து தெரிந்துகொள்வோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com