20. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது மூளையைப் பெரிதும் பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.
20. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது மூளையைப் பெரிதும் பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியதாகும். ஆசிய நாடுகளிலும், மேற்கு பசிபிக் நாடுகளிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தகைய காய்ச்சல், விவசாயம் செய்யப்படும் கிராமப்புறங்களில்தான் அதிகம் ஏற்படுகிறது.

இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஃபிளாவி வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இது ஆர்.என்.ஏ. வைரஸ் வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸில் நான்கு உள்பிரிவுகளும் உள்ளன.

டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல், ஜிகா வைரஸ் காய்ச்சல், செயிண்ட் ஜாயிஸ் மூளைக்காய்ச்சல் ஆகியவையும்கூட ஃப்ளாவி வைரஸ் இனத்தில் உள்ளவைதான்.

இந்த வகை வைரஸை கியூலக்ஸ் இன பெண் கொசுக்கள்தான் மனிதர்களுக்குப் பரப்புகின்றன.

எப்படிப் பரவுகிறது?

இந்த வைரஸ், பன்றிகளின் உடலில் இருந்தோ, காட்டில் வாழும் பறவை இனங்களின் உடலில் இருந்தோ கொசுக்களை அடைந்திருக்கலாம். இவற்றின் உடலில் பெருக்கமடையும் வைரஸ்கள், கொசுக்கள் மூலமாக மனிதர்களை அடைகின்றன. மேலும், கருவுற்ற பெண்ணிடமிருந்து சிசுவுக்குப் பரவலாம்.

ஜப்பானி மூளைக்காய்ச்சல் பாதித்த நாடுகள்

1870-ம் ஆண்டிலேயே ஜப்பான் நாட்டில் இந்த வைரஸ் கிருமியால் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், இதனை ‘ஜப்பானிய மூளைக்காய்ச்சல்’ என்றும், கிருமியை ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் என்றும் அழைக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து முதன்முதலாக இந்த வைரஸ் 1935-ம் ஆண்டு பிரித்தெடுக்கப்பட்டது.

இவ்வகை வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, நேபாளம், கொரியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. தவிர, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில தீவுகள், மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த வைரஸின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கூறிய பல்வேற நாடுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளில் 5 முதல் 6 குழந்தைகள் இவ்வகை மூளைக்காய்ச்சலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.

இந்த மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவீதம் பேர் இறந்திருக்கிறார்கள். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறிப்பாக வளரும் நாடுகளில் இத்தகைய இறப்பு விகிதம் 35 சதவீதம் வரை உயர்ந்தும் இருக்கிறது.

இந்தியாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

இந்தியாவில், 1973-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் இந்தக் காய்ச்சலின் பாதிப்பால் மக்கள் முதன்முறையாக அவதிக்கு உள்ளானார்கள். அதன்பிறகு, உத்தரப் பிரதேசம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களிலும், தமிழகத்திலும் இத்தகைய மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலும் 5 முதல் 9 வயதுடைய சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட காய்ச்சலில் 5700  பேர் பாதிக்கப்பட்டு, அதில் 1315 பேர் இறக்க நேரிட்டது.

பல்வேறு ஆய்வுக்கூடப் பரிசோதனைகளின்படி, இந்தக் காய்ச்சல் வெயில், மழை, குளிர் என எல்லாக் காலங்களிலும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தாலும், மழைக் காலத்தில் இந்தக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கொசு கடித்ததில் இருந்து 5 முதல் 15 நாள்களுக்குள் நோயாளிக்கு காய்ச்சலும், பிற தொந்தரவுகளும் ஏற்படும்.

நோய் அறிகுறிகள்

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பலரும் ஆரம்பத்தில் தொந்தரவுகள் எதுவும் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால், விரைவில் தொந்தரவுகள் ஏற்படும். முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குளிர், அசதி, குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

ஆனால், வைரஸ் தாக்கத்தால் மூளை பாதிக்கப்படும்போது, கழுத்துப் பகுதியை திருப்ப முடியாத இறுக்கம் ஏற்படும். தலைவலி மேலும் அதிகரிக்கும். நோயாளிக்கு வலிப்பு ஏற்படும். கை, கால் தளர்வடையும். அதாவது, நோயாளிக்கு மூளை பாதிப்பினால் பக்கவாதம் ஏற்படலாம். மூளையின் செயல்திறன் குறையும். நோயாளி சுயநினைவை இழக்கலாம். மயக்க நிலையை அடையலாம். குறிப்பாக, இந்த மூளைக்காய்ச்சலால் குழந்தைகளும் சிறுவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

பரிசோதனைகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு, காய்ச்சலுக்கான பொதுவான ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படும். இதில், ரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவை அறியப்படும்.

மேலும், தண்டுவடத்தை சுற்றியுள்ள நீரை எடுத்து (CSF - Cerebrospinal Fluid) அதில் இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்கள் உள்ளதா என்று கண்டறிவது ஒரு முக்கியமான பரிசோதனையாகும் (IgM/Antibodies Test).

காய்ச்சல் ஏற்பட்ட 3 முதல் 8 நாள்களுக்குள் இந்தப் பரிசோதனைகள் மூலம், ஏற்பட்டிருப்பது ஜப்பானிய மூளைக்காய்ச்சலா என்பதை கண்டறிய முடியும். எலிசா பரிசோதனையின் மூலமும், பி.சி.ஆர். பரிசோதனை மூலமும் இந்தக் காய்ச்சலைக் கண்டறியலாம்.

மூளை தண்டுவடப் பகுதி ஸ்கேன் பரிசோதனை, மூளை வரைவு பரிசோதனை (இஇஜி) ஆகியவையும் தேவைப்படும். கல்லீரல் செயல்பாடு பரிசோதனை, சிறுநீரகச் செய்லபாடு பரிசோதனை, ரத்தத்தில் தாது உப்புகளைக் கண்டறியும் பரிசோதனை ஆகியவையும் சிகிச்சைக்குப் பயன்படும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்த மூளைக்காய்ச்சலை பிற வைரஸ்களால் வரும் மூளைக்காய்ச்சல், இணைப்பு திசுக்களினால் வரும் மூளை பாதிப்பு, மூளையில் வளரும் கட்டிகள், மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவுகளில் இருந்து வேறுபடுத்திக் கண்டறிய வேண்டும்.

சிகிச்சைகள்

இந்தக் காய்ச்சலை முழுமையாகச் சிகிச்சை செய்து குணப்படுத்தவோ, இந்தக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை அழிக்கும் வைரஸுக்கு எதிரான மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இவ்வகை மூளைக்காய்ச்சல் ஏற்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அங்கு அவருக்கு இரண்டு வகையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

1. நோயின் தொந்தரவுகளுக்கான சிகிச்சைகள்

இதில், நோயாளிகளின் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவற்றையும், வலிப்பையும் குறைப்பதற்கான மருந்துகள் தரப்படும். மூளையின் நீர் அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிகிச்சைகளும் தரப்படும்.

2. பொதுவான அடிப்படை சிகிச்சைகள்

நோயாளியின் காய்ச்சல், நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், இதயம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். உணவு உண்ண முடியாவிட்டால், குளுக்கோஸ் முதலான திரவங்கள் கொடுக்கப்பட்டு அவரது உடல் கண்காணிக்கப்படும்; பராமரிக்கப்படும்.

காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி

பிறவகை கொசுவினால் பரவும் காய்ச்சலைப் போலவே, கொசுக்களை ஒழிப்பதுதான் முதல் பணி. தலையாய பணி. வீட்டைச் சுற்றியும் பொது இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

மேலும், சாக்கடைகள் பெருகாமலும், அங்கு பன்றிகள் வளர்க்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொசுக்கள் பெருகி, பன்றிகள் மூலம் வைரஸ் கிருமிகளும் கொசுக்களைச் சென்றடையும். இவ்வகை வைரஸ் கிருமியால் மக்களுக்கு எளிதில் மூளைக்காய்ச்சல் பரவிவிடும்.

காய்ச்சல் ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி

இவ்வகை மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான தடுப்பூசிகள் இப்போது கிடைக்கின்றன.

குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி, இந்தக் காய்ச்சல் பாதிப்புக்கு உட்பட்ட மற்றும் வருவதற்கான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. (உ.ம். IZIARO VACCINE, INACTIVATED VEROCELL VACCINE). இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு, மீண்டும் பூஸ்டர் டோஸாக 28 நாள்களுக்குப் பிறகு போட்டுக்கொள்ள வேண்டும். இதனை 17 வயதுக்கு மேற்பட்டவர்கள்  போட்டுக்கொள்ளலாம்.

இதேபோல், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசியை 2 மாதங்கள் தொடங்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் இருந்து பல்வேறு ஆசிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள், குறைந்த்து ஒரு வாரத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, போலியா, மஞ்சள் காமாலை தடுப்பூசி போல, குழந்தைகளுக்கு இவ்வகை தடுப்பூசி வெளிநாடுகளில் கொடுக்கப்படுவதில்லை. பாதிப்பு நிறைந்த இடங்களில் மட்டும் கொடுக்கப்படுகிறது.

நமது நாட்டில் SA14-14-2 என்ற சீன தயாரிப்பு தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. இதனை, குழந்தைகளுக்கு 9-12 மாதங்களுக்குள் ஒரு ஊசியும், பிறகு 16-24 மாதங்களில் ஒரு ஊசியாகவும் போடப்படுகிறது. இவற்றை தோலுக்கடியில் போட்டுக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com