முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவிலி. அரசு மருத்துமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :6 டிசம்பர் 2012, 5:12 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 18 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 6 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களும் பகல், இரவு பணி மாற்றி பார்ப்பதால் சராசரியாக தினம் வரும் புற நோயாளிகள் 1500 பேரை பார்க்க 3 டாக்டர்களே உள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையை போக்கி கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, நகரின் மையப் பகுதியில் பஸ்நிலையத்தின் மிக அருகில் இருப்பதால் இந்த மருத்துவமனையை சங்கரன் கோயிலில் இருந்து டி.கல்லுப்பட்டி வரையுள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துக்களில் காயம் அடைவோர் இங்கு கொண்டுவரப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தினமும் சுமார் 1500 புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.

இந்த மருத்துவமனைக்கு 18 டாக்டர்கள் பணியிடம் உண்டு. இதில் தற்போது 7 காலிப்பணியிடம். டாக்டர் கணேஷ்பாபு மாற்றுப் பணிக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்களாக உள்ளார். டாக்டர் கிருத்திகா என்பவர் மதுரை ராஜாஜீ அரசு மருத்துவமனைக்கு டைவர்சனாகி சென்றுவிட்டார். டாக்டர்கள் செல்லபாஸ்கர், ரமேஷ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்கள். மொத்தம் 6 டாக்டர்களில் இருக்கும் ஒரு பெண் மருத்துவர் விடுப்பில் சென்றாலும் மகப்பேறு பார்க்க இயலாத நிலை. இருக்கும் மருத்துவர்கள் பகல், இரவு பணி பார்க்கும் போது சராசரியாக புற நோயாளிகளை பார்க்க 3 அல்லது இரு டாக்டர்களே இருக்கிறார்கள்.

மொத்தம் 9 துப்புரவு பணியாளர் பணியிடம் இங்கு உள்ளது. ஆனால் தற்போது ஒரு இளைஞரும், ஒரு மூதாட்டியும் உள்ளார்கள். பகலில் ஒருவர், இரவில் ஒருவர். எவ்வாறு எவ்வளவு பெரிய மருத்துவமனையை சுத்தம் செய்து, கழிப்பறைகளை சுத்தம் செய்ய இயலும். நடைமுறையில் மருத்துவமனையை துப்புரவாக பராமரிக்க இயலுமா? தற்போது காய்ச்சல் சீசனில் ஏழை பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வந்து திண்டாடுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் அரசு மருத்துவமனையின் நிலையை அறிந்து தனியார் மருத்தவமனைக்குச் செல்கிறார்கள்.

இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மேட்டுத் தெருவைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மனைவி பிரேமா விஜி, பிரசவத்திற்காக வந்துள்ளார். அங்கு பெண் மருத்துவர் புஷ்பலதா விடுப்பில் இருந்ததால், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்துள்ளார்கள். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றால் தான் தாயையாவது காப்பாற்ற இயலும் எனக் கூறியுள்ளார்கள். குழந்தை இறந்த நிலையில் தாய் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 24 மணி நேர தாய் சேய் மையம் மூடப்பட்டு, அதிலிருந்த பெண் மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல முறை அரசிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கே.அர்ஜூனன், ஐ.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் டி.எஸ்.பி. எஸ்.சக்திவேல், நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கோரிக்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.