/

ரூ.1500 லஞ்சம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிர்க்கா சர்வேயர் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.1500 லஞ்சம் பெற்ற பிர்க்கா சர்வேயர் அ.ராசு (படம்) வை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்...

News image
Updated On :19 நவம்பர் 2012, 8:42 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.1500 லஞ்சம் பெற்ற பிர்க்கா சர்வேயர் அ.ராசு (படம்) வை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை, ஆனையூரைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் ராசு (56). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரிவில், பிர்க்கா சர்வேயராக வேலை செய்து வந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நெசவாளர் காலனியில் குடியிருந்து வருபவர் ரா.கிருஷ்ணகுமார் (42). இவர் ஸ்ரீஆண்டாள் கோயில் வாசலில் புகைப்படம் எடுக்கும் கடை வைத்துள்ளார். கிருஷ்ணகுமார், தான் இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் மாவட்ட நீதிமன்றம் அருகே வாங்கியுள்ள இடத்திற்கு பட்டா மாறுதலுக்காக பிர்க்கா சர்வேயர் ராசுவிடம் சென்றுள்ளார். அவர் பட்டா மாறுதலுக்கு ரூ.1500 கேட்டாராம். 
லஞ்சம் கொடுக்க மனமில்லாத கிருஷ்ணகுமார், இது குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் செய்தார். போலீஸாரின் ஆலோசனையின் பேரில் திங்கள்கிழமை ரசாயன பொடி தடவப்பட்ட பணத்தை கிருஷ்ணகுமார், பிர்க்கா சர்வேயர் ராசுவிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் சாமிநாதன், விஜயகாண்டீபன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் ராசுவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.