நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்தன் (32). இவர் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உளளார். இவரது சகோதர் மகேந்திரன் (32) நாகப்பட்டினத்தில் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். மகேந்திரன் திருமணத்தை முன்னிட்டு திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்க இருவரும் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வந்து பெருங்காலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது முகையூர் கிராமம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மின்னல் வேகத்தில் மோதிவிட்டு சென்றுவிட்டது. இவ்விபத்தில் இருவரும் ரத்தகாயங்களுடன் சாலையில் கிடந்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ காரை நிறுத்தி 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் இருவரையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து தலைமை மருத்துவர் சுகுமாரிடம் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். காயமுற்ற இருவரும், உடனடியாக தனது காரில் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏவிற்கு நன்றி தெரிவித்தனர்.