காட்டுமன்னார்கோயிலிலிருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை காலை வந்தது. சிதம்பரம் அருகே பொன்னாங்கன்னிமேடு என்னுமிடத்தில் பன்றி குறுக்கே வந்ததால் டிரைவர் கண்ணன் (45) திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த புவனகிரி மிராளூரைச் சேர்ந்த கண்டக்டர் ராஜா (28) கீழே விழுந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். பேருந்தில் பயணம் செய்த டி.நெடுஞ்சேரியைச் சேர்ந்த பார்த்தீபன் (21) பஸ்ஸுக்குள்ளேயே கீழே விழுந்தார். அவரது இடுப்பு முறிந்தது. இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கண்டக்டர் ராஜா தீவிர சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பயணி பார்த்தீபன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.