விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் இந்த ஆண்டு போதிய நெல் விளைச்சலும் இல்லை, நெல்லுக்குரிய விலையும்


காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் இந்த ஆண்டு போதிய நெல் விளைச்சலும் இல்லை, நெல்லுக்குரிய விலையும் கிடைக்கவில்லை. எனவே கூடுதல் செலவிட்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு (2014-15ல்) மேட்டூர் அணை கடந்த 10-8-2014ல் திறக்கப்பட்டதை நம்பி குறிப்பாக காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் முன்கூட்டியே தமிழகஅரசு அறிவுரைப்படி நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் நீர்பாசனத்திற்கு வந்து சேராததால், விவசாயிகள் போர்வெல் மூலம் நாற்றங்கால் நட்டனர். பாசன வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரப்படாததால் திறந்துவிடப்பட்ட நீரும் கடை மடை வரை செல்வில்லை. இதனால் செப்டம்பர் மாதத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் முளைத்த நெற்பயிர்கள் கருகியது. மீண்டும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.
அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் முளைத்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. பயிர்கள் வளர்வதற்கு தட்டுப்பாடு காரணமாக உரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி போட்டு பயிர்களை காப்பாற்றும் நிலை ஏற்பட்டது. பிறகு பூச்சி தாக்குதல், புகையான் தாக்குதல் என நெல் அறுவடை வரை கூடுதல் செலவு செய்து பூச்சி மருந்து தெளிக்க நேரிட்டது. ஏக்கருக்கு 25 மூட்டை முதல் 30 மூட்டை வரை கிடைக்கும் என எதிர்ப்பார்த்த விவசாயிகளுக்கு பூச்சி மற்றும் புகையான் தாக்குதலால் 15 மூட்டை முதல் 20 மூட்டைகள் வரைதான் மகசூல் கிடைத்தது.
இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தெரிவித்தது: போதிய ஆட்கள், அறுவடை இயந்திரம் கிடைக்காததால், கூடுதல் வாடகைக்கு அறுவடை இயந்திரம் வைத்து அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 70 சதவீத அறுவடை பணிகள் முடிவுற்றுள்ளன. ஏக்கருக்கு ரூ.20ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து விவசாயிகளுக்கு மிஞ்சியது ஏமாற்றமேதான். அறுவடை செய்த நெல்லை தனியார் வியாபாரிகள் 62 கிலோ மூட்டை ரூ.900-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு முன்பே விவசாயிகள் வங்களில்வைத்துள்ள நகைகள், மீட்க முடியாமல் வங்கி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி, விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை பின்பற்றி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறார் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...