விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெசவாளர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கையை வலியுறுத்தி நெசவார் கூட்டுறவு சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இப் போராட்டம் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் 9 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 800 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். இவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா சேலைகள் கைத்தறியில் நெய்வதற்கு நூல் வழங்கப்படும். இவர்கள் நெய்து கொடுத்த பின்னர் ஒரு சேலைக்கு ரூ.85 கூலியாக வழங்கப்படும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ரூ.4 லட்சம் மதிப்புள்ள சேலைகள் சுந்தரபாண்டியம் சங்கத்திற்கு வந்து இறங்கியுள்ளது. இவற்றை விசைத்தறியில் நெய்து கொண்டு வந்துள்ளார்கள். விசைத்தறியில் நெய்வதற்கு கூலி ரூ.45 ஆகும். ஆனால் கைத்தறியில் நெய்வதற்கு கூலி ரூ.85 ஆகும்.
தமிழக அரசு நெசவார்களின் நலன் காப்பதற்காகவும் கைத்தறியை ஊக்குவிக்கவும் இது போன்ற கூலியைக் கொடுத்து வருகிறது.
விசைத்தறியில் சேலைகள் நெய்யப்பட்டு கொண்டு வரப்பட்டதை அறிந்த நெசவாளர்கள் சுமார் 800 பேர் சுந்தரபாண்டியம் சங்கத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு கைத்தறிக்கான நூல் வழங்க வேண்டும். ஏற்கனவே நெய்ததற்கு கூலி வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகையிட்டனர். பின்னர் செயலாளர் ராஜசேகர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த வாரத்திற்குள் நெசவுக்கு நூல் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இது குறித்து நெசவாளர்கள் கூறுகையில், அரசு நெசவாளர்களின் நலன் கருதி கைத்தறியில் நெய்வதற்குத் தான் நூல் வழங்குகிறது. கூலியும் அதிகமாக கொடுக்கிறது. ஆனால் இங்குள்ள அலுவலர்கள் மற்றும் சில சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டுச் சேர்ந்து அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் விசைத்தறியில் நெய்தால் ஒரு சேலைக்கு ரூ.40 மிச்சமாவதால், விசைத்தறியில் நெய்வதை, கைத்தறியில் நெய்ததாக கணக்கு காட்டி மோசடி செய்கிறார்கள். இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு, நெசவாளர்களுக்கு விரோதமாய செயல்படும் அலுவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.