மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லையென்று சசிகலா நிரூபித்தால் தான் அவருக்கு ஆயிரம் கும்பிடு போடத் தயார் என தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவர் ஜெகதீஸ்வர் ரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது. ஜெயலலிதா மறைவுக்கு பின் உள்ள சதியை தெரிந்து கொள்ளும் உரிமை அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்டு. கட்சி தொடர்பான சிக்கல்களை தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு மாநில, மத்திய அரசிற்கு உள்ளது. மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் இறப்பு வரை என்ன நடந்து என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
ஜெ.வின் சொத்து விவரங்கள் வெளியில் தெரியாது அதனால் அவர் சொத்தின் வரவு, செலவுகளை நிறுத்தி வைக்க வேண்டும். ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 14ம் தேதி மனு தாக்கல் செய்தேன். அந்த மனு பதிவு செய்யப்பட்டது. அதில் 2012ல் சசிகலா ஸ்லோ பாய்சன் அளித்து ஜெ. சாகடிக்க முயற்சி செய்தது குறித்து குறிப்பிட்டுள்ளேன்.
ஜெ.விற்கு இறுதிசடங்கு செய்யும் உரிமை சசிகலாவிற்கு இல்லை. அவரின் சொத்துக்களை அபகரிக்க அவர் செய்த சதியின் வெளிபாடு அது. கட்சி, பதவி, பணம் உள்ளிட்டவற்றின் மேல் சசிகலாவிற்கு ஈடுபாடு இல்லை. ஜெ.வின் இறப்பிற்கும் சசிகலாவிற்கு தொடர்பு இல்லை என்று நிரூபித்தால் அவருக்கு ஆயிரம் கும்பிடு போட நான் தயார்.
நடிகை கௌதமி, ஜெ. அண்ணன் மகள் தீபா, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் ஜெ.வின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் விரைவில் தில்லியில் உள்ள ஜன்தர் மன்தர் அருகில் போராட்டம் நடத்த உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் நகலை அவர் திங்கட்கிழமை காலை அலிபிரியில் உள்ள தேவஸ்தான உண்டியலில் சமர்பித்ததாக அவர் கூறினார்.