புதுதில்லி: 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 27-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வரும் 2019-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும் 27-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த காரணத்தால் 27-ஆம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விளம்பரங்கள், நடத்தை விதிமீறல்கள், பிரச்சாரங்களின் போது அவதூறு பேசுவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணையம் அரசுக்கு அளித்துள்ள ஒரு சில முன்மொழிவுகளில் கடிசுகளின் கருத்துக்களை பெறவும், உதாரணமாக, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகளை அதிகரிப்பது குறித்து அரசியல் கட்சிகளிடமிருந்து கருத்துக்களைப் பெற விரும்புகிறது.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரங்கள், நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.