சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான 4 ஆம் ஆட்டம் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித், ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேற, பின் களமிறங்கிய சாம்சன், ஸ்மித்துடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் அவுட்டானார். பின் களமிறங்கிய மில்லர் (0), உத்தப்பா (5), ராகுல் டெவெட்டியா (10), பராக் (6) அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இந்நிலையில் அதிரடியாக ஆடிய ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த போது சாம் கரண் பந்துல் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது. டாம் கரண் 10 ரன்களுடனும், கடைசி ஓவரில் 4 சிக்ஸர் அடித்த ஆர்ச்சர் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் சாம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம், சென்னையின் வெற்றிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.