

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மைதானத்தை சுற்றி 1,500 கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது.
எனவே, பாஜகவின் மூத்த தலைவர்கள் மேற்குவங்கத்தில் முகாமிட்டு தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி கொல்கத்தாவில் பிரசாரத்தில் பங்கேற்கவுள்ளார்.
கொல்கத்தாவின் ப்ரைகேட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரதான மேடை மற்றும் இரண்டு சிறிய மேடை அமைக்கப்படவுள்ளது. ஒரு சிறிய மேடையில் பாஜகவின் மாநில தலைவர்களும், மற்றொன்றில் பத்திரிகையாளர்களும் அமர உள்ளனர்.
மேலும், பொதுக்கூட்டத்தில் 7 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரதான மேடையின் பின்புறம் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு, மைதானத்தை சுற்றியும் 1,500 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
கொல்கத்தா முழுவதும் பிரதமரின் பாதுகாப்புக் குழுவின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கொல்கத்தா நகருக்குள் மார்ச் 7ஆம் தேதி இரவு 8 மணிவரை வெளியூர் சரக்கு வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், கொல்கத்தாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட தலைவர்களின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.