இந்தியாவின் முதல் ஆப்பிள் விற்பனையகம்: திறப்பு விழாவில் ஏ.ஆர்.ரகுமான்!
இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம் மும்பையில் இன்று திறக்கப்பட்டது.
இந்தியாவுடான 25 ஆண்டு வர்த்தகத்தை கொண்டாடும் விதமாக பிரத்யேக விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இந்தியாவில் முதல் ஆப்பிள் விற்பனையகத்தை இன்று காலை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் விற்பனையகத்துக்கு வெளியே வரிசையில் காத்துள்ளனர்.
தொடர்ந்து, வியாழக்கிழமை தில்லியில் இரண்டாவது விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் திறக்கின்றது.
இந்த ஆப்பிள் விற்பனையகத்தில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது.